பலன் பல தரும் ஆஞ்சனேயர்

Sunday, March 27, 2011

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டி தெருவில் அமைந்துள்ளது திருவேங்கடமுடையான் கோவில். இதற்கு முன்பகுதியில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் ஸ்ரீபக்த ஆஞ்சனேயர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவில் அமைந்த விதமே சற்று வித்தியாசமானது. பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களில் யாரோ ஒருவர் ஒரு சிறிய ஆஞ்சனேயர் சிலையை கோவிலின் முன்பகுதியில் வைத்துவிட்டுச் சென்று விட்டார். பெருமாளை வணங்க வரும் பக்தர்கள் அந்த ஆஞ்சனேயர் சிலைக்கும் கற்பூரம் ஏற்றி துளசி மாலை அணிவித்து வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்த சிலைக்கு கோவில் கட்டி வழிபட வேண்டும் என்று பக்தர்கள் மனதில் தோன்றியது. இதை கோவில் தர்மகர்த்தாவிடம் கூறி, அந்த இடத்திலேயே ஆஞ்சனேயருக்கு கோவில் கட்ட அனுமதி கேட்டனர். அவர் சிறிதும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார்.

பிறகு கோவில் பணிகள் பக்தர்களது பொருளுதவியாலும் உழைப்பாலும் சிறப்புற துவங்கி மிக அற்புதமாக நிறைவேற்றப்பட்டது. விக்ரம் வருடம், சித்திரை மாதம் 28-ஆம் தேதி, புதன்கிழமையன்று ஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா முன்னிலையில் வேத விற்பன்னர்களால் திரளான பக்தர்கள் சூழந்திருக்க சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோவில் கட்ட ஆரம்பித்த நாள் முதல் முடியும் வரை தினமும் காலை முதல் மாலை வரை மாருதி ஒன்று எதிரில் உட்கார்ந்து ஆலயப் பணிகளைக் கவனித்த வண்ணம் இருந்தது ஆச்சரியமான விஷயம்! ஆஞ்சனேயரின் அருள் அனைவருக்கும் உண்டு; அவர் நம்மை எப்பொழுதும் கைவிடாமல் காப்பார் என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது.

இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் பிரார்த்தனைகள் எண்ணியபடி நிறைவேறுகிறது என்று உளமாரக் கூறுகிறார்கள். இந்த ஆஞ்சனேயருக்கு ஒன்பது வாரம் துளசி மாலை அணிவித்து நெய் விளக்கேற்றி வழிபட்டால் எல்லாவித நோய்களும் தீர்ந்துவிடுகிறது என்கிறார்கள் பக்தர்கள். அமாவாசையன்று பூஜையில் வைத்த செந்தூரக்கயிறை வாங்கி கையில் கட்டிச் செல்கின்றனர். இது எப்பொழுதும் நம்மை காக்கும் கவசமாகத் திகழ்கிறது.

இந்தக் கோவிலின் 12-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு விமரிசையாக நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment